tamilnadu

img

பொருளாதார நெருக்கடியில் தள்ளிய மோடி அரசு

நாடு முழுவதும் இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

புதுதில்லி/சென்னை, அக். 16- மோடியின் மத்திய பாஜக ஆட்சியின் கீழ் பொருளாதார நெருக்கடி மேலும் அதி கரித்துள்ளது. மக்களின் துன்ப துயரங்கள் அதிகரித்துள்ளன. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரை வார்ப்பது, வேலையின்மை, விவசாயிகள் தற்கொலைகள், விவசாய நெருக்கடி முதலானவை அதிகரித்து வருகிறது. மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து இடதுசாரிக் கட்சிகள் சார்பில், நாடு முழுவதும் அக்டோபர் 10 முதல் 16 ஆம் தேதி வரை அகில இந்திய எதிர்ப்பு தினம் அனுசரிக்குமாறு அறைகூவல் விடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அக்டோபர் 16 புதனன்று இடதுசாரிக்கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் அகில இந்திய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

தலைநகர் தில்லியில் அகில இந்திய எதிர்ப்பு தினம் எழுச்சியுடன் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கவிதா  கிருஷ்ணன் உட்பட இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். பேரணியாக வந்த ஊழியர்களை காவல்துறையினர் நாடாளுமன்ற வீதியில் தடுத்து நிறுத்தியதைத் தொடர்ந்து, அங்கே கண்டனக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி, து.ராஜா, கவிதா கிருஷ்ணன் முதலானோர் உரையாற்றினர். 

தமிழகம்

தமிழ்நாட்டிலும் இடதுசாரிக்கட்சிகள் சார்பில் அகில இந்திய எதிர்ப்பு தின இயக்கம் நடைபெற்றது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை யில் சித்த மருத்துவக்கல்லூரி அருகில் நடைபெற்ற கண்டன இயக்கத்திற்கு  சிபிஐ  மாவட்ட செயலாளர் காசி விஸ்வநாதன் தலைமை வகித்தார்.  சிபிஎம்எல் மாநி லக்குழு உறுப்பினர் ஜி.ரமேஷ்  துவக்கி வைத்துப் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கண்டன உரையாற்றினார். சிபி எம் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், சி.பி.ஐ ரெங்கன் ஆகியோர் பேசினர். விழுப்புரம் தெற்கு மாவட்டம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று உரையாற்றினார். 

அவர் பேசுகையில், ஏழை, எளிய மக்களின் பிரச்சனைகளை தீர்க்காமல் கார்ப்ப ரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்படும் மோடி, மக்கள் கவனத்தை திசை திருப்ப வேட்டி அணிந்து நாடகமாடுகிறார் என்று சாடினார்.  ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.வி.சரவணன் தலைமை வகித்தார்.  விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.வெங்கடேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிபிஐ கே.எஸ்.அப்பாவு நன்றி கூறினார்.
 

;